'மாஜி' அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை
'மாஜி' அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை
ADDED : ஜூலை 05, 2024 10:16 PM
கரூர்:கரூர் மேலக்கரூர், சார்-பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர், போலியான ஆவணங்கள் தயாரித்து, 22 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து கொண்டதாக, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன், ஷோபா உள்ளிட்ட, ஏழு பேர் மீது ஜூன், 9ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.
சாட்சி கையெழுத்து
நேற்று காலை தாளப்பட்டி கூலி நாயக்கனுாரில் உள்ள யுவராஜ் வீடு, தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ் வீடு, செங்கல் சூளை, பத்திரப்பதிவின் போது, சாட்சி கையெழுத்து போட்ட ஈஸ்வரமூர்த்தியின் கவுண்டன்புதுார் வீடு ஆகிய இடங்களில், சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி சி.பி.சி.ஐ.டி., போலீசார், 15க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர்.
மூவரின் வீடுகளிலும் நேற்று காலை, 11:30 மணிக்கு சோதனை நிறைவு செய்தனர். அப்போது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சில ஆவணங்களைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனைக்கு உள்ளான செல்வராஜ், தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., எம்.ஜி.ஆர்., மன்ற செயலராக உள்ளார். இவரும் யுவராஜும், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள்.
நிலுவை
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வரும், இந்த வழக்கிலும், வாங்கல் போலீசார் விசாரித்து வரும் நிலமோசடி வழக்கிலும், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலருமான விஜயபாஸ்கர், முன் ஜாமின் கேட்டு, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.