ADDED : ஜூன் 27, 2024 12:41 AM

சென்னை: தமிழகம், குஜராத் மாநிலங்களை ஒட்டி, கடலில் தலா, 500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு 7,453 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
தமிழகம், குஜராத் உட்பட நாடு முழுதும், நிலத்தில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், சீசன் காலத்தில் மட்டும் மின்சாரம் கிடைக்கிறது.
அதேசமயம், வெளிநாடுகளில் கடலில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையில், அதிக நாட்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது. எனவே, நம் நாட்டிலும் கடலில் காற்றாலை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ஆய்வு செய்யப்பட்டதில், தமிழகம், குஜராத் கடலில் சாத்தியக்கூறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. முதற்கட்டமாக, தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள கடலில் தலா, 500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் வரையிலான கடற்கரையில் இருந்து குறைந்தது, 50 கி.மீ., துாரமுள்ள கடலில், காற்றாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நிலத்தில், 1 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க சராசரியாக, 6 - 7 கோடி ரூபாய் செலவாகிறது. இதே திறனில் கடலில் அமைக்க, 15 கோடி ரூபாய் செலவாகும். அதிக முதலீடு தேவை.
கடலில் காற்றாலை அமைக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு, 'வயாபிலிட்டி கேப் பண்ட்' திட்டத்தில் நிதி உதவி செய்ய உள்ளது. இதற்காக, மொத்த செலவில் நிறுவனங்களின் முதலீடு போக, மீதி நிதியை மத்திய அரசு வழங்கும்.
அதன்படி, தமிழகம் மற்றும் குஜராத் கடலில் தலா, 500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, 7,453 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.