ADDED : ஏப் 24, 2024 09:19 PM
சென்னை:'குரூப் 2 ஏ' பதவிக்கான பிரதான தேர்வு வினாத்தாள் முறையில், டி.என்.பி.எஸ்.சி., மாற்றம் செய்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது.
குரூப் 2 ஏ பதவிகளுக்கான தேர்வு திட்டத்தில், சிறிது மாற்றங்கள் செய்து, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. இதன்படி, குரூப் 2 ஏ பதவிக்கு, முதல் நிலை தகுதி தேர்வின் பழைய முறையில், எந்த மாற்றமும் இல்லை. குரூப் 2 ஏ பிரதான தேர்வில், வினாத்தாள் முறை மாற்றப்பட்டுள்ளது.
பிரதான தேர்வின், 2ம் தாளில், 10ம் வகுப்பு தகுதியில், பகுத்தறியும் திறன், பொது நுண்ணறிவு திறன் அறிதல் மற்றும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கில கேள்விகள் பகுதி, கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல், பிரதான தேர்வில், கட்டாய தமிழ் மொழி தகுதிக்கான முதல் தாளில் மட்டும், குறிப்பிட்ட அளவுக்கு மதிப்பெண் எடுக்க வேண்டியது அவசியம். 2ம் தாளில் எத்தனை மதிப்பெண் வேண்டுமானாலும் எடுக்கலாம். அவை தரவரிசை பட்டியலுக்கான கணக்கில் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட தேர்வு கால உத்தேச அட்டவணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

