ADDED : ஏப் 01, 2024 04:31 AM

தொண்டாமுத்துார்: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை முகப்பேரைச் சேர்ந்த ரகுராம், 50, என்பவர், தன் நண்பர்கள் 15 பேருடன், நேற்று முன்தினம் காலை வெள்ளியங்கிரி மலை ஏறி உள்ளார்.
மாலையில் ஐந்தாவது மலையில் உள்ள சீதா வனம் அருகில் செல்லும் போது, ரகுராமிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இது குறித்து, வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடன், டோலி துாக்குபவர்கள் சென்று, ரகுராமை அடிவாரத்திற்கு துாக்கி வந்தனர். அவரை பரிசோதனை செய்த ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள், ரகுராம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
வெள்ளியங்கிரி மலையேறியதில், இரண்டு மாதங்களில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

