ADDED : ஆக 08, 2024 01:23 AM

சென்னை:படகில் சமைத்துக் கொண்டிருந்த போது தீயில் சிக்கிய சென்னை மீனவரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.
சென்னையைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி, 21, மீனவர். இவர், நேற்று முன்தினம் சக மீனவர்களுடன் கடலில் மீன்பிடிக்க சென்றார். படகில் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியது. தீயை அணைக்க போராடியும் பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து, 'வாக்கிடாக்கி' வாயிலாக, கடலோர காவல் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் 180 கி.மீ., தொலைவில் இருந்த காக்கிநாடா கடலோர மீட்பு படையினருக்கு தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக கப்பலில் சென்று தீக்காயமடைந்த சிரஞ்சீவியையும், மற்ற மீனவர்களையும் மீட்டு மருத்துவ உதவி அளித்தனர்.
தொடர் சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில், மீனவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.