தமிழக அரசு மீது சென்னை ஐகோர்ட் அதிருப்தி; ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு
தமிழக அரசு மீது சென்னை ஐகோர்ட் அதிருப்தி; ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு
ADDED : மார் 07, 2025 01:18 PM

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் தூய்மைப் பணியாளர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் தூய்மைப் பணியாளர் நியமனம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தூய்மை பணியாளர் நியமனத்திற்கு 4 வாரங்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மேற்கொள்ளும் நியமனங்களுக்க அரசு உதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், ஏற்கனவே தீர்வு காணப்பட்ட விவகாரத்தில் தேவையில்லாமல் மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு தரப்பு வக்கீலிடம் நீதிபதிகள் கடிந்து கொண்டனர். அதோடு, தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டதுடன், தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டவருக்கு ரூ.2.50 லட்சமும், சட்டப்பணி ஆணை குழுவுக்கு ரூ.2.50 லட்சம் கொடுக்க ஆணை பிறப்பித்தது. தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டது.