மீனவர்களுக்கு அபராதம் தள்ளுபடி கோரி முதல்வர் கடிதம்
மீனவர்களுக்கு அபராதம் தள்ளுபடி கோரி முதல்வர் கடிதம்
ADDED : செப் 06, 2024 02:32 AM
சென்னை:'தமிழக மீனவர்கள் 12 பேருக்கு இலங்கை நீதிமன்றம், 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை, மனிதாபிமானத்துடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
புதுக்கோட்டையை சேர்ந்த நான்கு மீனவர்களை, மீன்படி படகுகளுடன், இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. அடிக்கடி கைது செய்யப்படுவதுடன், படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, மீனவ சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21ம்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த போது, கைது செய்யப்பட்ட, 12 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம், 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது, ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இது, மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும்.
எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும். மீனவர்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.