ADDED : ஜூலை 13, 2024 11:35 PM
சென்னை:அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற, ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளிப்பதால், இதை தடுக்க மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆவணங்களை சமர்ப்பிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பொது வினியோக திட்ட இணையதளத்தில், புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, திருமணச் சான்று, சமையல் காஸ் சிலிண்டர் ரசீது, 'ஆதார்' எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பின், விண்ணப்பதாரரின் முகவரியில் உணவு வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, தனி சமையல் அறையுடன் வசிப்பதை உறுதி செய்து, ரேஷன் கார்டு வழங்க பரிந்துரை செய்வர்.
இதையடுத்து, ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்படும். இந்த பணிகள், 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் தமிழக அரசு வழங்குகிறது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு, அரசு விதித்த நிபந்தனைக்கு உட்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த உதவித் தொகையை பெறுவதற்காக, பலரும் புது கார்டுக்கு விண்ணப்பித்து வருவதால், பல மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை.
இது, விண்ணப்பதாரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதிய கார்டு வழங்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ஆய்வுக்கு செல்லும் போது மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆகியவற்றை கேட்கின்றனர்.
இது குறித்து, உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் ஒருவர் கூறியதாவது:
உயரதிகாரிகளின் அறிவுறுத்தலில், புது கார்டுக்கு விண்ணப்பித்த பயனாளிகள் தகுதியான நபர்களா என்பதை உறுதி செய்ய, மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.
தனி வீட்டில் வசிப்பவர், காஸ் ரசீது வழங்கினால் போதுமானது. ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு, விரைவில் புதிய கார்டுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

