ADDED : ஏப் 06, 2024 10:38 PM
சென்னை:பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை, அந்தந்த கற்பித்தல் மொழி ஆசிரியர்களே திருத்த வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை மறுநாள் முடிய உள்ளன. இதைத் தொடர்ந்து, விடை திருத்தம் தொடர்பாக, தேர்வுத்துறை இணை இயக்குனர் நரேஷ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அந்தந்த மாவட்ட விடைத்தாள்கள், அந்த மாவட்டத்திலேயே மதிப்பீடு செய்யப்படும். தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள், தமிழ் வழி விடைத்தாள்களையும்; ஆங்கில வழி ஆசிரியர்கள், ஆங்கில வழி விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும். இதில், எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. மதிப்பீட்டு பணிகளை, குறிப்பிட்ட நாட்களுக்குள் காலதாமதமின்றி முடிக்க வேண்டும்.
அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என, அனைத்திலும் உள்ள தகுதியான பாட ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தப் பணிக்கு அமர்த்த வேண்டும். வரும் 11ம் தேதிக்குள் ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்துவதில், தமிழ் வழி ஆசிரியர்கள் ஆங்கில வழி தாளையும்; ஆங்கில வழி ஆசிரியர்கள் தமிழ் வழி தாளையும் திருத்துவதால், மதிப்பெண் பதிவிடுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விடை திருத்த விதிகளில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

