இலங்கை பெண்ணிடம் பறிமுதல் செய்த தாலியை ஒப்படைத்தது சுங்கத்துறை
இலங்கை பெண்ணிடம் பறிமுதல் செய்த தாலியை ஒப்படைத்தது சுங்கத்துறை
ADDED : மார் 02, 2025 01:17 AM

சென்னை : இலங்கை தமிழ் பெண்ணின் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்படி அப்பெண்ணிடம் தாலியை ஒப்படைத்தனர்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர், 2023 டிசம்பரில் திருமணம் முடிந்து, குடும்பத்தினருடன் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த பெண் உள்ளிட்ட மூன்று பெண்கள் அணிந்திருந்த தாலிக்கொடி, வளையல்கள் போன்றவை கடத்தல் நகைகள் எனக்கூறி பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, அப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பிப்., 15ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'பெண்களுக்கு தாலி மிக முக்கியமானது. தாலி அணிந்து வருவது கடத்தல் அல்ல.
'எனவே, சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தாலிக் கொடியை, இலங்கை தமிழ் பெண்ணுக்கு திருப்பித் தர வேண்டும்' என்று கூறப்பட்டது.
இதையடுத்து, பறிமுதல் செய்த தாலிக்கொடியை திரும்ப பெறுவதற்காக, அப்பெண் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகம் வந்தனர்.
அவர்களிடம் தாலிச் செயின்களை, அதிகாரிகள் ஒப்படைத்தனர்.