ADDED : ஆக 01, 2024 02:13 AM
சென்னை:தென் மேற்கு பருவ மழை தீவிரம் காரணமாக, தமிழக அணைகளில் நீர் கையிருப்பு 171 டி.எம்.சி., யாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 90 அணைகள் நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 224 டி.எம்.சி., ஆகும்.
இதில், மேட்டூர், பவானிசாகர், முல்லைப்பெரியாறு உள்ளிட்ட 15 அணைகள் முக்கியமானவை. இவற்றின் மொத்த கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., ஆகும்.
நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகளில், ஜூலை 18ம் தேதி நிலவரப்படி, 78 டி.எம்.சி., நீர் இருந்தது. தென்மேற்கு பருவ மழையால், பல அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்து வந்தது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கன மழையால், பல அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அவற்றின் நீர் இருப்பு உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 224 அணைகளிலும் சேர்த்து, 171 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால், நீர் இருப்பு விரைவில் 200 டி.எம்.சி.,யை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 டி.எம்.சி., எவ்வளவு?
கணக்குப்படி, 1 டி.எம்.சி., என்பது, 100 கோடி கன அடி; அதாவது, 2831 கோடி லிட்டர் தண்ணீர் கொள்ளும். ஒரு கன அடியில், 28.317 லிட்டர் தண்ணீர் பிடிக்கலாம்.