'69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்தது கருணாநிதியா?'
'69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்தது கருணாநிதியா?'
ADDED : ஜூன் 03, 2024 06:30 AM

சென்னை : 'தமிழகத்தில், 69 சதவீதம் இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டதற்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதாவே காரணம்; விபரம் தெரியாமல், கருணாநிதி தான் காரணம் என, யாரோ எழுதிக் கொடுத்ததை நடிகர் ஒருவர் பரபரப்புக்காக பேசியுள்ளார்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: மத்திய அரசு, 69 சதவீத இடஒதுக்கீட்டை வரைமுறைப்படுத்த நினைத்தபோது, சமூக நீதிக்கு எதிராக அமைந்து விடும் எனக்கூறி, தமிழகத்தில் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, அதை கடுமையாக எதிர்த்தார்.
ஜெயலலிதாவுடன் ஆலோசித்தபின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த நான், சட்டசபையில், 69 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உறுதியளித்தேன்.
பின், தமிழகத்தில், 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தனிச்சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க, அன்றைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து, ஜெயலலிதா வலியுறுத்தினார். நீண்ட வலியுறுத்தலுக்குப் பின் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
கடந்த 1994 ஆகஸ்ட் 24ல், அரசியல் சட்டத் திருத்தம் லோக்சபாவில் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் மட்டுமே, 69 சதவீத இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது. இதற்காக, ஜெயலலிதாவுக்கு 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமல், தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீடு இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என, நடிகர் ஒருவர் பேசியுள்ளார்; மக்களை ஏமாற்ற அவர் நினைப்பது கண்டனத்துக்குரியது.
மிகவும் தரம் தாழ்ந்து போன எண்ணத்தின் விளைவு தான் இந்த பேச்சு. இதுபோன்ற வரலாற்றை திரித்து கூறுவதை, இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜெயகுமார் கூறியுள்ளார்.