'இலவச வேட்டி, சேலை பள்ளி சீருடை வழங்குவதில் தி.மு.க., அரசு சுணக்கம்'
'இலவச வேட்டி, சேலை பள்ளி சீருடை வழங்குவதில் தி.மு.க., அரசு சுணக்கம்'
ADDED : ஆக 05, 2024 09:38 PM
சென்னை:'பொது மக்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் மாணவர்களுக்கான 4 செட் இலவச பள்ளி சீருடை வழங்கும் திட்டங்களில், தி.மு.க., அரசு சுணக்கம் காட்டுகிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
பொங்கல் பண்டிகையின்போது பொது மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு இலவசமாக 4 செட் சீருடை வழங்கும் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் முழுமையாக செயல்படுத்தப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில், இலவச வேட்டி, சேலையை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கியதில்லை.
இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு, 3 செட் சீருடைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 4 செட் வழங்கியதாக கணக்கு காட்டுவதாகவும், இதன் வாயிலாக இந்த ஆட்சியாளர்கள், அரசுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
குறித்த காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு, 4 செட் சீருடைகளை உடனே வழங்க வேண்டும். வேட்டி, சேலையை பொது மக்களுக்கு குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். வேட்டி, சேலை மற்றும் சீருடை நெய்வதற்கான வேலைகளை, தமிழக நெசவாளர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.