மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
ADDED : மே 24, 2024 04:43 AM

திண்டிவனம் : 'தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. ஒரே வளாகத்தில் உள்ள தனித்தனி மின் இணைப்புகளை ஒன்றாக்கும் முயற்சியில் மின்வாரியம் ஈடுபட்டு வருகிறது.
மின்கட்டணத்தை உயர்த்தியும், வாரியம் நஷ்டத்தில் தான் செயல்படுகிறது. மின் வாரியத்தில் நடைபெறும் ஊழல், முறைகேட்டை தடுத்தாலே நஷ்டம் ஏற்படாது. தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
கடந்த 2021ல் தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் கூறுகிறார்.
இது, மக்களை ஏமாற்றும் செயல். தி.மு.க., ஆட்சியில் கூறிய 510 தேர்தல் வாக்குறுதிகளில், எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
வருவாய் துறை மூலம் ஜாதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, 500 முதல் 10,000 ரூபாய் வரை கையூட்டு கொடுத்தால் தான் பெற முடியும்.
இதைத் தவிர்க்க, வரும் சட்டசபை கூட்டத்தொடரில், பொது சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவர் என முதல்வர் கூறினாலும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை 6 மாதம் எங்களிடம் வழங்கினால், கஞ்சா, மது இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். மக்கள் ஓட்டு போட்டு எங்களை தேர்ந்தெடுத்தால், 6 மாதத்தில் கூறியதை செய்யவில்லை என்றால், நாங்களாகவே விலகி விடுவோம்.
விழுப்புரத்தைப் போலவே திண்டிவனம் பஸ் நிலையம், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்படுகிறது. இந்த பஸ் நிலையம், மழைக்காலத்தில் மிதக்கும். எனவே, திண்டிவனம் பஸ் நிலையத்தை வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.