நாய் குளித்த தகராறு: பெட்ரோல் குண்டு வீச்சு; சிறுவர்கள் தலைமறைவு
நாய் குளித்த தகராறு: பெட்ரோல் குண்டு வீச்சு; சிறுவர்கள் தலைமறைவு
ADDED : மே 11, 2024 05:29 AM

மதுரை: மதுரையில் நாயை குளிப்பாட்டிய தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய இரு சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை வடக்குமாசிவீதி ஆதிமூலம் பிள்ளை சந்தைச் சேர்ந்தவர் மனோன்மணி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகாலட்சுமி. கடந்த வாரம் தங்களது வீட்டு நாயை தெருவில் மகாலட்சுமி குளிக்கவைத்தார்.
அந்த தண்ணீர் மனோன்மணி வீட்டின் முன் தேங்கியது. இதுதொடர்பாக இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மனோன்மணி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதுதொடர்பாக மகாலட்சுமியின் சகோதரர் மகனான 16 வயது சிறுவன், அவரது நண்பர் 15 வயது சிறுவனை திலகர்திடல் போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது: மகாலட்சுமி சகோதரர் கீரைத்துரையில் வசிக்கிறார். அவரது 16 வயது மகன், மகாலட்சுமியின் வீட்டிற்கு தெற்குவாசல் நண்பரான 15 வயது சிறுவனுடன் அடிக்கடி வந்து செல்வார். கடந்த வாரம் இருவரும் வந்தபோதுதான் நாயை குளிப்பாட்டியதில் தகராறு ஏற்பட்டது. கடந்த மே 4ம் தேதி மனோன்மணி வீட்டிற்கு சென்று 16 வயது சிறுவன் மிரட்டியுள்ளார். இதைதொடர்ந்தே பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர் என்றனர்.
எங்கே செல்கிறது இளைய தலைமுறை
சமீபகாலமாக மதுரையில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. செல்லுார் பகுதியில் ரயில் பெட்டியில் ஏறி பெண் ஊழியரை வெட்டி நகை பறிக்க முயன்ற வழக்கில் 16,17 வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்றுமுன்தினம் மதுரை உறங்கான்பட்டியில் தாயை துன்புறுத்திய தந்தையை பிளஸ் 2 மாணவர், 17 வயது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தார். மதுரையில் வழிப்பறி, திருட்டுகளில் சிறுவர்கள்தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.
போதை பழக்கம், பள்ளி செல்லாமை, பெற்றோர் கண்காணிக்காதது போன்ற காரணங்களே சிறுவர்கள் குற்றவாளிகளாக மாற காரணம்.