ADDED : ஆக 04, 2024 01:03 AM
சென்னை:கர்நாடக அணைகள் நிரம்பியதால் திறந்து விடப்படும் தண்ணீர், காவிரியில் பெருக்கெடுத்துள்ளது. இதனால், மேட்டூர் அணையும் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள பாறையில், கருப்பு நிற நாய் சிக்கியுள்ளதாகவும், அதை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் உத்தரவிடக்கோரி, பிராணிகள் நல ஆர்வலரான பிரகாஷ் காந்த் என்பவர், வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவசர வழக்கை, விடுமுறை நாளான நேற்று மாலை, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது.
அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ''அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்படுகிறது.
''வருவாய் துறையினர், 'ட்ரோன்' வாயிலாக நாய்க்கு உணவு அளித்து, உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்,'' என்றார்.
இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், பாறையில் சிக்கி உள்ள நாய் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தது.