ADDED : மே 26, 2024 11:06 PM
மதுரை : மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரவேண்டிய 'ஸ்பைஸ் ஜெட்' விமானம் ரத்து செய்யப்பட்டதால் துபாய் செல்ல முடியாமல் மதுரையில் பயணிகள் அவதியுற்றனர்.
மதுரை - துபாய் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படுகிறது. தினமும் துபாயில் இருந்து காலை 7:40 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 10:40 மணிக்கு வரும். மதுரையில் இருந்து மதியம் 12:00 மணிக்கு துபாய்க்கு புறப்படும்.
நேற்று காலை மதுரையில் இருந்து துபாய் புறப்பட வேண்டிய பயணிகள் 168 பேர் குடியேற்றத்துறை அதிகாரிகளின் சோதனைக்குச் சென்றனர். அவர்களிடம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பயணிகள் அனைவரும், முன்னறிவிப்பின்றி விமானம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நேற்று செல்ல வேண்டிய பயணிகள் இன்றும், நாளையும் (மே 27, 28 ல்) செல்ல மாற்றம் செய்து தருவதாக ஊழியர்கள் அறிவித்தனர்.

