ADDED : செப் 08, 2026 03:25 AM
தி.மு.க., அமளி; வெளிநடப்பு
சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் விஜய், அமலாக்கத்துறை அறிக்கை மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாக காட்டி, தி.மு.க., மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடும் அமளிக்கு இடையே, ஒரு மணி நேரம் விஜய் பேசினார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி மீது குற்றச்சாட்டுகளை கூறியதால், அதற்கு உதயநிதி பதிலளிக்க அனுமதிக்குமாறு தி.மு.க.,வினர் கோஷமிட்டனர்.
சபாநாயகர் பிரபாகர், ''முதல்வர் விஜயின் பேச்சை தடுக்கும் நோக்கத்துடன், எழுந்து நின்று கோஷமிட்டு கொண்டே இருந்ததால், எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க முடியாது,'' என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, சபாநாயகர் இருக்கையின் முன், சபையின் நடுவே அமர்ந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோஷமிட்டனர். அப்போது முதல்வர் விஜய் குறுக்கிட்டு, உதயநிதியை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, தி.மு.க.,வினர் இருக்கைக்கு திரும்பினர்.
உதயநிதி பேச எழுந்தபோது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோஷமிட்டதால், கோபமடைந்த சபாநாயகர், ''என்னை நிர்ப்பந்திக்கும் வகையில் நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது,'' என கூறி, உதயநிதி பேச அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உதயநிதி தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
