ADDED : மார் 30, 2024 07:33 AM

சென்னை : ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 11 நாட்கள் தள்ளிப்போகிறது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள், வரும், 2ம் தேதி துவங்கி, 12ம் தேதி முடியும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரம்ஜான் பண்டிகை, 10ம் வகுப்பு தேர்வு, தெலுங்கு, தமிழ் புத்தாண்டு விடுமுறை, தேர்தல் என, பல்வேறு காரணங்களால், இரு தேர்வுகள் மாற்றப்பட்டு உள்ளன.
பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்.,10ல் நடத்துவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் பாடத்தேர்வு, ஏப்., 22ல் நடக்கும்
ஏப்., 12ல் நடத்துவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு, ஏப்., 23ல் நடத்தப்படும். இதன்படி தேர்வுகளை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பழைய அட்டவணைப்படி, ஏப்., 13 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று கூறப்பட்டிருந்தது. தேர்வு அட்டவணை மாற்றத்தால், கோடை விடுமுறை, ஏப்., 13ல் துவங்குவதற்கு பதில், ஏப்., 24ம் தேதியில் துவங்க உள்ளது.

