கொள்ளிடத்தில் 1.25 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றம்; கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை
கொள்ளிடத்தில் 1.25 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றம்; கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை
ADDED : ஆக 02, 2024 11:45 PM

காட்டுமன்னார்கோவில் : மேட்டூர் அணையில் இருந்து, கவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை கீழணைக்கு வந்ததையடுத்து, 1.25 லட்சம் கன அடி உபரி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையால், கபினி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
4 நாட்களுக்கு முன் 2.5 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், மேட்டூர் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டியது.
தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 1.50 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அது கல்லணை வழியோக நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் உள்ள கீழணைக்கு (அணைக்கரை) வந்து சேர்ந்தது.
இங்கு மொத்தம் 9 அடி மட்டுமே தேக்க முடியும். ஆனால், தற்போது 11 அடி உயரத்திற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால், கீழ்ணையின் வடக்கு, தெற்கில் உள்ள 70 ஷட்டர்கள் வழியாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேறி வருகிறது. அணையில் 8 அடி வரை இருப்பு வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நீர் வரத்து தொடரும் என்பதால், கீழணைக்கு வரும் உபரி நீரில், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,284 கன அடியும், வடக்கு மற்றும் தெற்கு ராஜன் பாசன வாய்க்கால்களில் 310 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், இரு கரையோர கிராமங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை, கொள்ளிடம் வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், உதவி பொறியாளர் கேசவராஜ் தலைமையிலான குழுவினர் கரையோர பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.