ADDED : மே 29, 2024 04:28 AM

கோவை, மே 29--
காலாவதி ஆவின் பிஸ்கட் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுத்து, ஆவின் நிர்வாகத்தை முதல்வர் சீரமைக்க வேண்டும் என, கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்திஉள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் மற்றும் கொடிவேரி அணை ஆவின் பாலகங்களில் காலாவதியான ஆவின் பிஸ்கட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் சோதனையில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. காலாவதியான 6 டன் பிஸ்கட் பாக்கெட்டுகள் இடம் மாற்றப்பட்டுள்ளன.
ஆவின் தயாரிப்புகள் தரமானவை என மக்கள் நம்புகின்றனர். காலாவதி பிஸ்கட் விற்பனை இந்த நம்பிக்கையை தகர்த்து உள்ளது.
தவறு செய்தவர்கள் மீது ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசால் எந்தவொரு வணிக நிறுவனத்தையும், வெற்றிகரமாக நடத்த முடியாது என்ற அவப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விடும். எனவே, முதல்வர் ஸ்டாலின், ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.