போலி எஸ்.எம்.எஸ்.,கள்: வங்கி அதிகாரிகள் எச்சரிக்கை
போலி எஸ்.எம்.எஸ்.,கள்: வங்கி அதிகாரிகள் எச்சரிக்கை
UPDATED : ஜூலை 19, 2024 03:23 AM
ADDED : ஜூலை 19, 2024 03:02 AM

சென்னை: வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது போன்று போலி எஸ்.எம்.எஸ்., அனுப்பி பண மோசடிகள் நடப்பதாக வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
'ஆன்லைன்' வாயிலாக பல வகைகளில் மோசடிகள் நடக்கின்றன. இது குறித்து போலீசார் தொடர்ந்து எச்சரித்தாலும் மோசடிகள் தொடரவே செய்கின்றன.
பணம் பறிக்கும் கும்பல்
அந்த வகையில் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது போன்று, மொபைல் போன்களுக்கு போலி எஸ்.எம்.எஸ்., அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்கள் பெருகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
போலி ஆன்லைன் செயலிகளை பதவிறக்கம் செய்யும்போது நம் தரவுகள் அனைத்தும் மோசடி கும்பலின் கைகளுக்கு சென்று விடும். இதில் தனிப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயர் உள்ளிட்டவை அடங்கும்.
இதைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது போன்ற எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். அது வங்கியில் இருந்து அனுப்பப்பட்டதைப் போலவே இருப்பதால் நாமும் அழுத்தி விடுவோம்.
லிங்கை தொட வேண்டாம்
இதன்பின் 'ரிமோட் ஆக்சஸ்' முறையை பயன்படுத்தி நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளை அடித்துவிடுவர்.
எனவே வங்கி பெயரில் வரவு வைக்கப்பட்டது போல வரும் போலி எஸ்.எம்.எஸ்., லிங்கை யாரும் தொட வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.