ADDED : செப் 05, 2024 07:43 PM
திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே என்.புதுாரில் மகள் திருமணத்தன்று தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புத்துார் அருகே என்.புதுாரைச் சேர்ந்த தம்பதி அழகப்பன்- - புனிதவள்ளி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். அழகப்பன் 58, சென்னையில் பலகாரம் செய்யும் வேலை செய்து வந்தார். மூத்த மகள் வைதேகிக்கு (செப்.5) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மகள் திருமணத்திற்காக அழகப்பன் என்.புதுார் வந்து திருமண வேலைகளை செய்து வந்தார்.
உறவினரை திருமணத்திற்கு அழைப்பதில் புனிதவள்ளிக்கும், அழகப்பனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோபமுற்ற அழகப்பன் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியேறி சென்றார்.
நேற்று திருப்புத்துாரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் அழகப்பன் இல்லாமல் வைதேகிக்கு திருமணம் நடந்தது. அதே நேரத்தில் என்.புதுாரில் ஒரு மரத்தில் அழகப்பன் துாக்கிட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருப்புத்துார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதனால் திருமண வீட்டார் சோகத்தில் மூழ்கினர். மகளின் திருமணத்தன்று தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியது.