உதயநிதியால் ரூ.13 கோடியை இழந்து தவிக்கிறேன்; சினிமா தயாரிப்பாளர் ராம் சரவணன் குமுறல்
உதயநிதியால் ரூ.13 கோடியை இழந்து தவிக்கிறேன்; சினிமா தயாரிப்பாளர் ராம் சரவணன் குமுறல்
UPDATED : ஏப் 03, 2024 03:47 AM
ADDED : ஏப் 02, 2024 10:22 PM

சென்னை:''அமைச்சர் உதயநிதி, 10 நாட்கள் கால்ஷீட் கொடுக்காததால், 13 கோடி ரூபாயை இழந்து தவிக்கிறேன்,'' என, திரைப்பட தயாரிப்பாளர் ராம் சரவணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதியை வைத்து, 2018ல், ஏஞ்சல் என்ற படத்தை தயாரித்தேன். இயக்குனர் அதியமான் இயக்கினார்.
உதயநிதி தன் மனைவியுடன் சேர்ந்து இரண்டு முறை கதை கேட்டு, அதன்பின் நடிக்க சம்மதித்தார். அவருக்கு சம்பளமாக, 2.75 கோடி பேசப்பட்டு, 1.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
படம் துவங்கிய நாளில் இருந்து, வேகமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிஜி தீவில், 42 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது; 2019ல், 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. பின், கொரோனா காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அடுத்து, 2021ல் தமிழக சட்டசபை தேர்தல் வந்தது.
தேர்தல் முடிந்ததும் உதயநிதி, மாமன்னன் படத்தை துவக்கினார். அவர் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தால், என் படம் முடிந்திருக்கும்; ஆனால், அவர் கால்ஷீட் வழங்கவில்லை.
அதேநேரம், அதுவரை எடுக்கப்பட்ட படக்காட்சிகளை கேட்டார். அதை பென்டிரைவில் பதிவேற்றம் செய்து கொடுத்தோம். படத்தில், அவர் காவி உடையுடன், மிகப்பெரிய யாகம் செய்வது போன்ற காட்சியை படமாக்கி இருந்தோம்.
அதன்பின், அவர் அப்படத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில், அவர் அமைச்சரானதுடன், சனாதனம் குறித்து பேசி இருந்தார்.
அவர் அக்காட்சிகளை நீக்கும்படி கூறியிருந்தால் கூட, நீக்கி இருப்பேன். ஆனால், எதுவும் கூறாமல், படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
இதுவரை படத்திற்கு, 13 கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன். படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பணம் வழங்கப்படாமல் உள்ளது. அவரது மேக்கப்மேன், உதவியாளர் போன்றோருக்கு சம்பளத்தை வாங்கிக் கொடுத்து விட்டார். மற்ற ஊழியர்கள் குறித்து கவலைப்படவில்லை.
உதயநிதி, 10 நாட்கள் ஒதுக்கி, நடித்துக் கொடுத்தால் பிரச்னை தீர்ந்து விடும். அதற்கு அவர் முன் வராததால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். அவர்களும் கண்டுகொள்ளவில்லை.
எனவே, நீதிமன்றம் சென்றேன். உதயநிதி மீது, 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தேன். இதனால், என்னை பழிவாங்க துடிக்கிறார்.
நான் பெருநிறுவனங்களுக்கு, வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகிறேன். அந்த தொழிலை முடக்க நினைக்கிறார். சில தினங்களுக்கு முன், புதுச்சேரியை சேர்ந்தவரிடம், ஒரு பஸ்சை விற்க பேசி முடித்தேன்.
அதற்கு தமிழக அரசின் தடையில்லா சான்று பெற, அரசு அலுவலகம் சென்ற போது, உங்கள் நிறுவனத்திற்கு எதுவும் செய்து தரக்கூடாது என, போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்தனர்.
உதயநிதியால் பணத்தை, நிம்மதியை இழந்து தவிக்கிறேன். படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிறிய பிரச்னையை தீர்க்காத இவர் எப்படி, தமிழகத்தின் பிரச்னையை தீர்ப்பார் என்று தெரியவில்லை.
இவ்வாறு ராம்சரவணன் கூறினார்.

