ADDED : மே 28, 2024 10:44 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் தனியார் கண் மருத்துவமனையில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
மேற்கு டில்லி பஸிம் விஹாரில், மந்த்ரா கண் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் நேற்று காலை 11:30 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து 6 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். ஒரு மணி நேரம் போராடி 12:30 மணிக்கு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மருத்துவமனையில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஏ.சி. இயந்திரம் மற்றும் லேசர் இயந்திரத்தில் தீப்பற்றி அது மற்ற இடங்களுக்கு பரவியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளங் குழந்தைகள் உடல் கருகி பலியான நிலையில், கண் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால், பஸிம் விஹாரில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.