25,000 தொழில் நிறுவனங்களில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தம்
25,000 தொழில் நிறுவனங்களில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தம்
UPDATED : ஆக 01, 2024 03:51 AM
ADDED : ஆக 01, 2024 02:27 AM

சென்னை:தமிழக மின்வாரியம், 25,000 தொழில் நிறுவனங்களில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்காக மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில், 'சிம் கார்டு' வாங்குவதுடன், மென்பொருள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் உயரழுத்த பிரிவில் இடம்பெறும், 11,000 தொழிற்சாலைகளில் மட்டும், ஆளில்லாமல் கணக்கெடுக்கும் தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பதிவேற்றம்
இந்த மீட்டரில் மாதம்தோறும் கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன், அலுவலக, 'சர்வரில்' இணைக்கப்பட்டுள்ளது.
அந்த தேதி வந்ததும், தானாக கணக்கெடுத்து, நுகர்வோருக்கு கட்டணம் அனுப்பப்படுகிறது.
இதேபோல், தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் வீடு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக, சென்னை தி.நகரில், 1.42 லட்சம் வீடுகள் உள்ளிட்ட இணைப்புகளில் பொருத்தப் பட்டு உள்ளன.
தற்போது, தாழ்வழுத்த தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தொழில் நிறுவனங்களில், மொபைல் போன் செயலியில் கணக்கு எடுக்கப்படுகிறது. இதற்கு பதில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
மொத்தம் உள்ள, 60,000 தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் முதற்கட்டமாக, 25,000ல் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
சிம் கார்டு
அந்த மீட்டரில் சிம் கார்டு பொருத்தி, அலுவலக சர்வருடன் இணைக்கப்பட உள்ளது. இதற்காக, '4 ஜி' அலைவரிசையில் இயங்கும் வகையில், சிம் கார்டு வாங்கும் நடவடிக்கையில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.
மேலும், கணக்கீட்டிற்கு மென்பொருளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிம் கார்டு வாயிலாக கிடைக்கும் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தி, மாதந்தோறும் ஆளில்லா மல் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும்.
தமிழக மின்வாரியம், 150 கிலோ வாட் வரை தாழ்வழுத்தப் பிரிவிலும்; அதற்கு மேல் உயரழுத்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்குகிறது.