ADDED : ஏப் 11, 2024 07:03 AM

சென்னை : தென் மாவட்டங்களில் இதுவரை பதிவான அதிக பட்ச வெப்பநிலை, இன்று முதல், 15ம் தேதி வரை, சற்று குறைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், மாநிலத்தின் சில மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும், இன்று முதல் 15ம் தேதி வரையிலும், மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில், தென் மாவட்டங்களில் சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலையானது, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.
கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, 40 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, திருப்பத்துாரில், 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணி, வேலுார், 38; நாமக்கல், தர்மபுரி, 39; ஈரோடு, கரூர் பரமத்தி, சேலம், 40 டிகிரி செல்ஷியஸ் என, மொத்தம், 12 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், தஞ்சாவூர், 36; பாம்பன், 35; நாகை, புதுச்சேரி, 34; வால்பாறை, 31; கொடைக்கானல், 21; ஊட்டி, 27 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது.

