ADDED : ஜூலை 06, 2024 04:23 AM

விழுப்புரம்: அரசியல் விமர்சகர் குறித்த அவதுாறு வழக்கில் முன்னாள் அமைச்சர் சண்முகம் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜரானார்.
முன்னாள் அமைச்சர் சண்முகம், கடந்தாண்டு மார்ச் 11ம் தேதி, திண்டிவனம் ரோஷணை போலீசில் புகார் அளித்தார். அதில், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, 'டிவி' நேர்காணலில், இரு பிரிவினரிடையே வன்முறையை துாண்டும் வகையில் ஜாதியை குறிப்பிட்டு நான் பேசியதாக அவதுாறு பரப்பியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், தனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டி திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், புகார் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்தாண்டு ஜூன் 30ம் தேதி ரோஷணை போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆனால், போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் சண்முகம் ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கமலா, வழக்கின் விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.