ADDED : ஜூலை 31, 2024 08:33 PM

திருச்சி:கரூரில் இருக்கும் தி.மு.க.,காரரின் துாண்டுதலின் பேரில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது, என்று, திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடந்ததாகக் கூறி, இரண்டு வழக்குகள் பதிவு செய்து, சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக்கி, அரசியல் பழிவாங்கும் எண்ணத்தில் நடந்த சம்பவம் இது. நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது; ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் என் மீது, 31 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் அரசியல் சார்ந்த வழக்குகள். எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அவற்றை விட்டு விட்டு கையாலாகாத தி.மு.க., அரசு பழிவாங்கும் நடவடிக்கைகள் மட்டும் எடுத்து வருகிறது.
கரூரில் இருக்கும் தி.மு.க.,காரரின் துாண்டுதலின் பேரில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் யார் என்று உங்களுக்கு தெரியும்.
இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்து, வழக்கில் இருந்து வெளியே வருவோம். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இதை வைத்து கட்சியினரை பயமுறுத்த நினைப்பது நடக்காது. ஒரு வழக்கை சி.பி.சி.ஐ.டி.,யிலும், ஒரு வழக்கை சட்டம்-ஒழுங்கு போலீசிலும் போட்டுள்ளனர்.
டோட்டல் டீமே என்னை உள்ளே வைக்க, இரண்டு மாதம் வேலை செய்துள்ளனர். இந்த வழக்கின் மூலம், என்னை மட்டுமல்ல கட்சியினர், என்னுடன் பழகியவர்கள் எல்லோரையும் தொந்தரவு செய்து விட்டனர். இது போல் நிறைய பார்த்து விட்டோம். இதற்கு மேல் ஒன்றும் இல்லை.
சி.பி.சி.ஐ.டி., காவலில் இருந்த போது, என்னை யாரும் துன்புறுத்தவில்லை. கட்சியில் எனக்கு ஆதரவு கொடுத்த நிர்வாகிகள், வக்கீல்களுக்கு மனமார்ந்த நன்றி.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.