பெட்ரோல் பங்கில் மோசடி வாகன ஓட்டிகள் போலீசில் புகார்
பெட்ரோல் பங்கில் மோசடி வாகன ஓட்டிகள் போலீசில் புகார்
ADDED : செப் 05, 2024 05:08 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பெட்ரோல் பங்கில் மோசடி செய்வதாக கூறி, வாகன ஓட்டிகள் போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த முதணை கிராமத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் நேற்று இரவு தனது பைக்கிற்கு, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள பெட்ரோல் பங்கில் ஜி.பே மூலம் ரூ.200 செலுத்தி பெட்ரோல் போட்டார். அப்போது, பங்க் ஊழியர் ரூ.400க்கு பெட்ரோல் போட்டதாக கூறியதால், மீண்டும் ரூ.200யை ஜி.பேவில் செலுத்தினார்.
சந்தேகமடைந்த இளஞ்செழியன், தனது பைக்கில்போட்ட பெட்ரோலை, வாட்டர் பாட்டிலில் பிடித்து பார்த்தபோது அரை லிட்டர் மட்டுமே இருந்தது. இதுகுறித்து கேட்ட இளஞ்செழியனை, பங்க் ஊழியர்கள் மிரட்டினர். அப்போது, இளஞ்செழியன், பெட்ரோல் போட வந்தவர்களிடம் இங்கு பெட்ரோல் போடாதீர்கள். மோசடி செய்கிறார்கள் எனக் கூறினர்.
அதைப் பொருட்படுத்தாமல், ஊத்தங்காலை சேர்ந்த பழனிவேல் ரூ.220க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு புறப்பட்டார். பைக்கில் பெட்ரோல் கே.ஜி., அளவு உயராததால் சந்தேகமடைந்த அவர், பெட்ரோலை பாட்டிலில் பிடித்து பாரத்தபோது ஒன்றரை லிட்டர் மட்டுமே இருந்தது.
பங்க் ஊழியர்கள் வாகன ஓட்டிகளை ஏமாற்றி வருவது உறுதியானதால், வாகன ஓட்டிகள் அனைவரும் பெட்ரோல் கேனுடன், எதிரே இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.