ADDED : ஜூன் 27, 2024 01:58 AM
சென்னை:''கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், 60 வயது நிறைவடைந்திருந்தால், அவரும் அவருடன் உதவியாளர் ஒருவரும், அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்,'' என, அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.
கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள் தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
மதுரையில் புதிய அரசு கவின் கலைக் கல்லுாரி 4.79 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
'கலைமாமணி' விருது பெற்ற கலைஞர்கள், 60 வயது நிறைவடைந்திருந்தால், அவரும் உதவியாளர் ஒருவரும், அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செல்ல அனுமதிக்கப்படுவர்
மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லுாரியில், பழைய கட்டடங்கள் ஒரு கோடி ரூபாயில் புனரமைக்கப்படும்
சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில், கருப்பொருள் சார்ந்த படிமக்கூடங்கள் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
கடலுார் மாவட்ட அரசு அருங்காட்சியக கட்டடம், ஒரு கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்படும்
அரிய அரும்பொருட்களை சேகரித்து, அரசு அருங்காட்சியகங்கள், எதிர்கால சந்ததியினருக்கான ஒரு களஞ்சியமாக்க, ஆண்டுதோறும் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அறிவித்தார்.