சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : செப் 09, 2024 08:53 PM

ஊட்டி:திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஊட்டி மகிளா கோர்ட் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி, 31, கோத்தகிரியில் உள்ள தனியார் லாட்ஜில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. தனது லாட்ஜ் அருகே பணிபுரிந்து வந்த 17 வயது சிறுமிடம் பழகியுள்ளார். கடந்த, 2020 ம் ஆண்டு , அக்., 6ம் தேதி, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கோவை அழைத்து சென்றுள்ளார். அங்கு, தனது நண்பர் வீட்டில் தங்க வைத்து தினந்தோறும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
சிறுமி காணாமல் போனதை அறிந்த அவரது பெற்றோர் கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். காணாமல் போன சிறுமியை போலீசார் தேடுவதை அறிந்த ராஜபாண்டி சிறுமியை மீண்டும் கோத்தகிரிக்கு கொண்டு வந்து விட்டு விட்டு சென்றார்.
சிறுமியை மீட்ட கோத்தகிரி போலீசார் விசாரணை செய்ததில் திருமண ஆசை வார்த்தை கூறி ராஜபாண்டி பாலியல் தொந்தரவு செய்தது விசாரணையில் தெரியவந்தது. கோத்தகிரி போலீசார் போக்சோ வழக்கு பதிந்து ராஜபாண்டியை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கம் 17வது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ராஜபாண்டிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு வக்கீல் செந்தில் ஆஜரானார்.