ஒயின் ஷாப் காசை கொடுங்கள் தி.மு.க., - எம்.எல்.ஏ., கெஞ்சல்
ஒயின் ஷாப் காசை கொடுங்கள் தி.மு.க., - எம்.எல்.ஏ., கெஞ்சல்
ADDED : செப் 05, 2024 01:52 AM
திருச்சி: கட்சியினருக்கு கொடுக்கப்படும் ஒயின் ஷாப் பணத்தை கொடுங்கள் உதவியாக இருக்கும் என்று, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், அந்தநல்லுார் ஒன்றிய கட்சி பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், மத்திய மாவட்ட செயலர் வைரமணி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ., பழனியாண்டி பேசியதாவது:
திருச்சி மத்திய மாவட்டத்தில் கட்சியினருக்கு கொடுப்பதற்காக, மாதந்தோறும் ஒயின் ஷாப்கள் வாயிலாக பணம் வசூலிக்கப்பட்டது.
அந்தப் பணம் முறையாக வசூலிக்கப்பட்டும், கடந்த 11 மாதங்களாக கொடுக்கப்படவில்லை. தெற்கு மாவட்டத்தில் தொடர்ந்து ஒயின் ஷாப் பணம் கொடுத்து வருகின்றனர்.
அமைச்சர் நேருவுக்கு, அவரது துறையை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால், கட்சியினருக்கு ஒயின் ஷாப் பணத்தை பிரித்துக் கொடுக்க மாவட்ட செயலர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரஷர், சுகர் ஆகியவற்றால் அவதிப்படும் கட்சியினர் மருத்துவ செலவுக்காவது பயன்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒயின் ஷாப் பணத்தை வாங்கி மா.செ.,க்களிடம் கொடுங்கள் என வெளிப்படையாக பேசி இருப்பது, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.