களஞ்சியம் செயலியில் குளறுபடி; வருமான வரி கணக்கில் சிக்கல்
களஞ்சியம் செயலியில் குளறுபடி; வருமான வரி கணக்கில் சிக்கல்
ADDED : பிப் 09, 2025 06:15 AM

ராமநாதபுரம் : தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பள பட்டியல் வழங்குவதில் குளறுபடியால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் களஞ்சியம் செயலி வாயிலாக சம்பள பட்டியல் தயார் செய்யப்பட்டு அதிலிருந்து கருவூலம் வாயிலாக சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக இதுவரை வழங்கப்பட்டுள்ள சம்பள பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனை பெற்று இதுவரை மொத்தமாக பிடிக்கப்பட்ட வருமான வரி விபரங்கள் வாயிலாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
களஞ்சியம் செயலியில் 2025 ஜன., மாதத்திற்கு இரு முறை சம்பளம் வழங்கியதாக பதிவிறக்கத்தில் இருந்தது. இது குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
தற்போது எந்த தகவலும் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக பதிவிறக்கம் செய்ய முடியாமல் வருமான வரி செலுத்திய விபரங்கள் தெரியாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.