135 நகரங்களில் நெருக்கமாக வீடுகள் கட்ட அரசு புதிய சலுகை
135 நகரங்களில் நெருக்கமாக வீடுகள் கட்ட அரசு புதிய சலுகை
ADDED : பிப் 24, 2025 01:40 AM

சென்னை: புராதன சின்னங்கள் உள்ள, 135 நகரங்களில், பக்கவாட்டு காலியிடம் இல்லாமல், தொடர் கட்டடங்களாக வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் குறைந்தபட்சம், 840 சதுரடி நிலம் இருந்தால் மட்டுமே, கட்டட அனுமதி வழங்கப்படும். சென்னையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் வசிக்கும் பகுதிகளில், குறைந்த பரப்பளவு மனைகளில் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.
குறிப்பாக, இத்தகைய இடங்கள், தொடர் கட்டட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், குறைந்த பரப்பளவு மனைகளில், பக்கவாட்டு காலியிடம் விடாமல், அடுத்தடுத்து வீடுகள் கட்ட அனுமதிக்கப்படும்.
இங்கு பெரிய அளவிலான அடுக்குமாடி கட்டடங்கள் வராது என்பதால், இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. இதை தமிழகம் முழுதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
அதை ஏற்று, முதல் கட்டமாக, புராதன கட்டடங்கள் உள்ள பகுதிகளில், இது போன்ற சலுகைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:
நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., வாயிலாக, பல்வேறு நகரங்களுக்கு, முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், 23 நகரங்களில், முழுமை திட்ட தயாரிப்பு, இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும், 112 நகரங்களில் முழுமை திட்ட தயாரிப்பு, பல்வேறு நிலைகளில் உள்ளது.
இந்த, 135 நகரங்களில் புராதன சின்னங்கள், பழங்காலம் தொட்டு வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளில், தொடர் கட்டடங்களை அனுமதிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இங்கு தெரு அடிப்படையில் இடங்களை வரையறுத்து, பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின், அந்தந்த பகுதிகளுக்கான முழுமை திட்டங்களில், திருத்தங்கள் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

