ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை: தமிழக அரசு புகார்
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை: தமிழக அரசு புகார்
ADDED : மார் 01, 2025 12:21 AM

புதுடில்லி: 'முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விசாரணை நடத்து வதற்கான கோப்புகளை, தமிழக கவர்னர் ரவி நிலுவையில் வைத்திருக்கிறார்' என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு, 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. ரவீந்திரன் என்பவர், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமான விஜய் நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை, 2022ல் போலீசார் கைது செய்தனர். பின், உச்ச நீதிமன்றத்தை அணுகி ராஜேந்திர பாலாஜி ஜாமின் பெற்றார்.
இந்நிலையில், புகார் அளித்த ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், 'ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தாமதிப்பதாக கூறி, கடந்த மாதம் இவ்வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதற்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. ராஜேந்திர பாலாஜி சார்பில், மூத்த வழக்கறிஞர் கிரி ஆஜராகி, வழக்கு தொடர்பான விபரங்களை எடுத்துரைத்தார். இந்த விவகாரத்தில், தமிழக அரசின் வாதங்களை கேட்பதற்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'ஏற்கனவே இந்த விவகாரத்தில், தமிழக போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
சம்பந்தப்பட்டவர் முன்னாள் அமைச்சர் என்பதால், தமிழக கவர்னரிடம் ஒப்புதல் கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்தோம். கடந்த பிப்ரவரியில் இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தும், கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்' என்றனர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க, தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.