ADDED : மார் 01, 2025 05:11 AM

சென்னை: ''கிரேட் சோழா சர்க்யூட்' என்ற ஒரு நாள் சுற்றுலாவை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
மார்ச் 2ம் தேதியான நாளை முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ள இந்த சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர், 9489129765 என்ற மொபைல் எண்ணில், தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் முன்பதிவு செய்யலாம். அப்படி, முன்பதிவு செய்தவர்கள் தங்களின் சொந்தச் செலவில் தஞ்சாவூர் செல்ல வேண்டும். அங்கு சுற்றுலா துறை சார்பில், சொகுசு பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டு, தஞ்சாவூரை சுற்றிக் காண்பிப்பர்.
தினமும் காலை, 7:00 மணிக்கு துவங்கி மாலை, 7:00 மணிக்கு முடியும் இந்த சுற்றுலாவில் பங்கேற்போர், தஞ்சை பெரிய கோவில், பழையாறை, உடையலுார், தாராசுரம், சோழர் மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு, அழைத்து செல்லப்படுவர். ஒரு நபருக்கு, 1,500 ரூபாய் கட்டணம்.
சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு நாள் தஞ்சை சுற்றுலாவில் பங்கேற்போர், சோழர்கள் வாழ்ந்த முக்கிய பகுதிக்கு அழைத்து செல்லப்படுவர். பயணத்தின் போது, காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்படும்' என்றார்.
ஆர்வமில்லை
முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 'திருச்செந்துார் - ராமேஸ்வரம்' மூன்று நாள் ஆன்மிக சுற்றுலா, கடந்த ஜனவரி, 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தச் சுற்றுலாவில் பங்கேற்போர், திருச்செந்துார், ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் அழைத்து செல்லப்படுவர். நபர் ஒருவருக்கு, 12,300 ரூபாய் கட்டணம் என, தெரிவிக்கப்பட்டது.
இச்சுற்றுலா அறிவிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதால், சுற்றுலாவை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சுற்றுலா கட்டணத்தை குறைக்க வேண்டும் என, சில தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.