ADDED : ஆக 05, 2024 11:51 PM
கோவை:தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
கோடை காலத்தில் வெயில் வாட்டியதால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டத்தில் சரிவு ஏற்பட்டது. ஜூன் முதல் செப்.,வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில், நடப்பாண்டு முன்கூட்டியே மழை துவங்கியது.
கடந்த வாரம், கோவை, நீலகிரி உட்பட பல பகுதிகளில் பெய்த கனமழையால், நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
பருவமழையால், கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலையில் திருவாரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்துார், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.