ADDED : ஏப் 13, 2024 12:41 AM
சென்னை:'ஆயிரம் கோடி ரூபாயில், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டும்' என, தி.மு.க., கூறியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில், கடந்த மூன்றாண்டுகளில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நோக்குடன் செயல்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்திட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும்.
அதில் தனிக்கவனம் செலுத்தி, பல்வேறு நலத்திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகள் மட்டுமல்லாமல், நகர்புறங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் வீதம், 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன.
ஆதிதிராவிட பழங்குடியின சமுதாய இளைஞர்கள், எல்லோருக்கும் இணையாக வீற்றிருந்து பணியாற்றி பொருளாதார நிலைகளாலும், சமுதாய மதிப்புகளாலும் பெருமைகளாலும் உயர்ந்து சிறந்து விளங்குகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

