ADDED : ஜூன் 07, 2024 01:58 AM

பெங்களூரு, இந்தியாவின், 'மாக் -- 3' ரக ராக்கெட் ஏவு வாகனத்திற்கான புதிய உந்துசக்தி டாங்க் தயாரிப்பு மற்றும் சி.என்.சி., இயந்திர கட்டமைப்பு வசதிகளை, பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல்., என்ற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் ஆலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார்.
அப்போது, சோம்நாத் பேசியதாவது:
தற்போது இருக்கும் வசதிகளை வைத்து, ஆண்டுக்கு இரண்டு 'மாக் -- 3' ராக்கெட் ஏவு வாகனங்களை மட்டுமே தயாரிக்க முடிகிறது. இந்த புதிய கட்டமைப்பு வசதிகளை வைத்து, ஆண்டுக்கு ஆறு மாக் - -3 ஏவு வாகனங்களை தயாரிக்க முடியும்.
இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களில், எச்.ஏ.எல்., நிறுவனம் மிக முக்கிய பங்காற்றும் என்பதால், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், வடிவமைப்பு சவால்கள் மற்றும் இஸ்ரோ மீது உள்ள அழுத்தத்தை குறைக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.