ADDED : மே 16, 2024 01:44 AM
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோர பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்காக, மஞ்சள் 'அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
வரும் 20ல் கனமழை ஓய்ந்து, 21ல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மாவட்ட கடலோர பகுதிகள், இலங்கை மற்றும் கேரள கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுஉள்ளனர்.