தமிழகத்தில் பல இடங்களில் வெளுத்து வாங்கியது கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழகத்தில் பல இடங்களில் வெளுத்து வாங்கியது கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
UPDATED : மே 20, 2024 01:48 AM
ADDED : மே 19, 2024 05:25 AM

சென்னை: தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம் , பொள்ளாச்சி, சிங்காநல்லூர், நீலகிரி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
கூடலூர், ஊட்டி தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்கள் விழுந்ததால் கர்நாடக, கேரள போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், கடந்த, 4ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுாரில் கனமழை பெய்தது. இரண்டு நாட்களில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. கோத்தகிரியில் இடுக்கரை, எம். கைகாட்டி பகுதிகளில், ராட்சத மரம் சாலையில் விழுந்து ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
ஊட்ட - குன்னுார் சாலையில், பன்சிட்டி அருகில், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியது. குன்னுார் டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு தடுப்பு சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. பொக்லைன் உதவியுடன் கற்கள் அகற்றப்பட்டன. காந்திபுரம் பகுதியில் ராஜூ என்பவரின் வீடு இடிந்தது. கூடலுார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பலத்த மழை பெய்தது. கோழிக்கோடு சாலை இரும்பு பாலம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. தமிழக - கேரளா - கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன.
கூடலுார் தீயணைப்பு துறையினர் பொக்லைன் உதவியுடன் நள்ளிரவு, 1:30 மணிக்கு மண் குவியலை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. சுற்றுலா பயணியர் பல மணி நேரம் வாகனத்தில் அமர்ந்திருந்ததால் அவதியடைந்தனர். குன்னுார் மலைப்பகுதியில் பெய்த கனமழையால், ரயில் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்ததால், ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
கூடலுார் தொரப்பள்ளி அருகே, குனில் பகுதியில் விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கியது. இன்றும், நாளையும் மழை தொடரும் என்பதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், அனைத்து துறையினரையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
பொள்ளாச்சி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழைக்கு பழங்குடியின குடியிருப்பில், வீட்டின் சுவர் விழுந்து சேதமடைந்தது. வால்பாறை ரோட்டில் பாறை சரிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், எஸ்.சந்திராபுரம் அருகே ரோட்டின் ஒரு பக்கம் முழுதும் மழைநீர் தேங்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்துக்குள்ளாயினர்.
திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்
நீண்ட காலமாக வறண்டு காணப்பட்ட திருப்பூர்பஞ்சலிங்க அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.தொடர்ந்து மழை பெய்வதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சுருளி அருவியில் குளிக்க தடை
தேனி மாவட்டம் சுருளி அருவில் மிகுந்த நீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சோத்துப்பாறை அணை
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை நிரம்பி வருவதால், வராக நதிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பெரியகுளம், வடுகபட்டி, மேலமங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

