'சிவாஜி வீட்டில் எனக்கு பங்கு இல்லை' ஐகோர்ட்டில் மூத்த மகன் ராம்குமார் தகவல்
'சிவாஜி வீட்டில் எனக்கு பங்கு இல்லை' ஐகோர்ட்டில் மூத்த மகன் ராம்குமார் தகவல்
ADDED : மார் 06, 2025 12:02 AM

சென்னை: 'நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில், எனக்கு எந்த பங்கும் இல்லாதபோது, அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள, 'ஈசன் சினிமா' தயாரிப்பு நிறுவனம், ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது; விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தனபாக்கியம் நிறுவனம்
இப்படத்தை தயாரிப்பதற்கு, 'தனபாக்கியம் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திடம், துஷ்யந்த், 3 கோடி 74 லட்சத்து 75,000 ரூபாயை, கடன் வாங்கி இருந்தார். இக்கடனை ஆண்டுக்கு, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதியும் அளிக்கப்பட்டது.
ஆனால், கடன் தொகையை திருப்பித் தராததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, இரு தரப்புடன் பேச்சு நடத்திய மத்தியஸ்தர், 'கடன் தொகை வட்டியுடன் சேர்த்து, 9 கோடி 2 லட்சத்து 40,000 ரூபாயை வசூலிக்கும் விதமாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
'அந்த படத்தை விற்பனை செய்து, கடனை ஈடு செய்ய வேண்டும். மீதத் தொகையை ஈசன் சினிமா நிறுவனம் வழங்க வேண்டும்' என, கடந்தாண்டு மே 4ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி, படத்தின் மீதான அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து, மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் துஷ்யந்தின் தாத்தாவான சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்தாண்டு தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துாஸ், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராம்குமார் தரப்பில், 'தந்தை சிவாஜி கணேசனின் வீட்டில், எனக்கு எந்த பங்கும் இல்லை. என் சகோதரர் நடிகர் பிரபு பெயரில் உள்ளது. எனவே, ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
பதில் மனு தாக்கல்
இதை கேட்ட நீதிபதி, 'உரிமையாளராக இல்லாவிட்டால், எப்படி ஜப்தி செய்ய முடியும்?' என்று கூறி, ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
ஊடகங்களில் வெளியான செய்திகளின் வாயிலாக தான், இந்த வீடு சிவாஜி கணேசனின் வீடு என்பதை, தான் தெரிந்து கொண்டதாகவும், இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்கும்படியும் அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு, நீதிபதி அப்துல் குத்துாஸ் தள்ளிவைத்தார்.