பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்; பள்ளியில் அமைச்சர் பேச்சு; கெட்டியாக பிடித்துக் கொண்ட பா.ஜ.,
பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்; பள்ளியில் அமைச்சர் பேச்சு; கெட்டியாக பிடித்துக் கொண்ட பா.ஜ.,
ADDED : செப் 09, 2024 11:17 AM

சென்னை: முன்பிறவியில் பாவம் செய்தவர்களுக்கு தான் இந்த ஜென்மத்தில் ஆண் குழந்தை பிறக்கும் என்று பள்ளி நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாவம்
பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, அரசுப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், அரக்கோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிய அமைச்சர் காந்தி மேடையில் உரையாற்றினார். அப்போது, முன்பிறவியில் பாவம் செய்தவர்களுக்கு மகன்களாகவே பிறக்கும் என்றும், புண்ணியம் செய்தவர்களுக்கே மகள்களே பிறக்கும் என பேசினார். அவரது இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அன்பில் மகேஷ் அவர்களே
இந்த வீடியோவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்த நாராயணன் திருப்பதி, 'முற்பிறவியில் பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்கிறார் அமைச்சர் காந்தி அவர்கள். ஆண்களாய் பிறப்பது பாவமா? இது மூட நம்பிக்கை பேச்சு இல்லையா? அரசு பள்ளியில் இப்படி பேசியதால் தானே மகா விஷ்ணுவை கைது செய்து நடவடிக்கை எடுத்தீர்கள். உங்கள் ஏரியாவில் வந்து இப்படி பேசிவிட்டு சென்றிருக்கிற இந்த அமைச்சரை சும்மா விடுவீர்களா? கைது செய்ய வேண்டும் என வற்புறுத்த மாட்டீர்களா அன்பில் மகேஷ் அவர்களே?,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
வலியுறுத்தல்
சென்னை அசோக் நகர் பள்ளியில் பாவம், புண்ணியம் பற்றி பேசியதால் பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். தற்போது, அதேபோல, அமைச்சர் காந்தியும் சர்ச்சை பேச்சு பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.