சட்ட விரோத கட்டுமானங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோத கட்டுமானங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஏப் 03, 2024 05:19 PM
ADDED : ஏப் 03, 2024 05:08 PM

சென்னை: ' உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை உட்பட பல்வேறு இடங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி ஏராளமானோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சட்டவிரோத கட்டுமானங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றகோரி தொடரப்பட்ட வழக்கு, இன்று (ஏப்ரல் 03) உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு வந்தது. அப்போது,‛‛ சட்டவிரோத கட்டுமானங்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்ட பின் 38 வருவாய் மாவட்டங்களில் எத்தனை கூட்டம் நடந்துள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நடவடிக்கை எடுக்கவா?. சட்டவிரோத கட்டுமான பணியில் ஈடுபடுவோரை பாதுகாக்கவா?.
அந்தந்த நகராட்சி அமைப்புகளில் எத்தனை சட்டவிரோத கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?'' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

