சிவகாசியில் கடன் பிரச்னையில் மகன், மகள், பேத்தியை கொலை செய்து ஆசிரிய தம்பதி துாக்கிட்டு தற்கொலை
சிவகாசியில் கடன் பிரச்னையில் மகன், மகள், பேத்தியை கொலை செய்து ஆசிரிய தம்பதி துாக்கிட்டு தற்கொலை
ADDED : மே 23, 2024 11:46 PM

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் ஆசிரியர் தம்பதி லிங்கம், மாரியம்மாள் கடன் பிரச்னையில் மகன், மகள், பேத்தியை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம் 47. மனைவி பழனியம்மாள் 45. மகள் ஆனந்தவள்ளி 27, மகன் ஆதித்யா 14. லிங்கம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பழனியம்மாள் சுக்கிரவார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். ஆனந்தவள்ளிக்கு திருமணமாகி சஷ்டிகா என்ற 2 மாத குழந்தை உள்ளது. ஆதித்யா சிவகாசியில் தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று வெகு நேரமாகியும் லிங்கத்தின் வீட்டு கதவு திறக்காததால், அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து பார்த்த போது லிங்கம், பழனியம்மாள் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். ஆதித்யா, ஆனந்தவள்ளி அவரது மகள் சஷ்டிகா அறையில் இறந்து கிடந்தனர்.
திருத்தங்கல் போலீசார் 5 பேரின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், பழனியம்மாளின் முதல் கணவர் சுந்தரமகாலிங்கம் விபத்தில் உயிரிழந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன் உடன் பணியாற்றிய லிங்கத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனந்தவள்ளி, பழனியம்மாளின் முதல் கணவருக்கு பிறந்த மகள். ஆனந்தவள்ளி சென்னை ஐ.டி., நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த பாலசுப்பிரமணியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிரசவத்திற்காக ஆனந்தவள்ளி, சிவகாசியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். லிங்கம், தெரிந்தவர்கள், உடன் பணியாற்றுபவர்கள், நண்பர்கள் என 40க்கும் மேற்பட்டோரிடம் கடன் வாங்கியுள்ளார்.
கடன் பிரச்னை காரணமாக சில மாதங்களுக்கு முன் லிங்கம் துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தற்போது பூர்வீக சொத்தை விற்று கடனை அடைக்க அவர் முயற்சி செய்து வந்துள்ளார்.
சொத்தை விற்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஆதித்யா, ஆனந்தவள்ளி, சஷ்டிகாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, கணவன் மனைவி இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, என்றனர்.