வருமான வரித்துறை விசாரணைக்கு தி.மு.க., - எம்.பி., ஆஜராக உத்தரவு
வருமான வரித்துறை விசாரணைக்கு தி.மு.க., - எம்.பி., ஆஜராக உத்தரவு
UPDATED : மே 26, 2024 03:16 AM
ADDED : மே 25, 2024 09:43 PM

சென்னை:பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் தரப்புக்கு விலக்கு அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கதிர் ஆனந்த் அல்லது அவரது வழக்கறிஞர், அதிகாரி முன் ஆஜராக உத்தரவிட்டது.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், வேலுார் தொகுதியில் தி.மு.க., சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பறிமுதல்
தேர்தலின்போது, வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், தாமோதரன் - விமலா தம்பதியர் வீட்டில் நடந்த சோதனையில், 11.48 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட தொகை, கதிர் ஆனந்துக்கு சொந்தமானது என, அவருக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ், வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.
இதுகுறித்த விசாரணைக்கு, வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, விசாரணை அதிகாரி 'நோட்டீஸ்' அனுப்பினார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், கதிர் ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதி சுவாமிநாதன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
ஆதாரம்
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கும், கதிர் ஆனந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆதாரம் இல்லாமல், அவரை வழக்கில் இணைத்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து, அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, விசாரணை அதிகாரி முன், மனுதாரர் அல்லது அவரது வழக்கறிஞர் ஆஜராகும்படியும், இறுதி உத்தரவு எதுவும் அதிகாரி பிறப்பிக்கக் கூடாது எனவும், நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
விசாரணையை, ஜூன் மூன்றாவது வாரத்துக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.