கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; தமிழகத்தில் குறைத்தால் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; தமிழகத்தில் குறைத்தால் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு
UPDATED : ஜூன் 16, 2024 01:24 PM
ADDED : ஜூன் 16, 2024 01:25 AM

சேலம் : கர்நாடகாவில் பெட்ரோல் மீதான கலால் வரி, 25.92 சதவீதத்தில் இருந்து, 29.84 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீது, 14.3ல் இருந்து, 18.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், லிட்டர் பெட்ரோல் விலை, 99.86 ரூபாயில் இருந்து, 102.86 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், லிட்டர் டீசல் விலை, 85.95 ரூபாயில் இருந்து, 88.96 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் பெட்ரோல் விலை, 102.62 ரூபாய், டீசல் விலை, 93.22 ரூபாயாக உள்ளது.
இதனால், தமிழகத்தை விட கர்நாடகாவில் டீசல் விலை, 4.26 ரூபாய் குறைந்து உள்ளது. பெட்ரோல் விலையில் பெரிய மாறுதல் இல்லை.
தமிழகத்தில் இருந்து நாடு முழுதும் லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகள், பெங்களூரு வழியே செல்வதால், 40 சதவீத லாரிகள், டீசல் தேவையை, கர்நாடகாவில் பூர்த்தி செய்து கொள்கின்றன. இதற்கு விலை குறைவே காரணமாக இருந்தது. இதனால் தமிழக டீசல் விற்பனையில் தினமும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தனராஜ் கூறியதாவது:
தமிழகத்தை விட புதுச்சேரி, கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு, 7 ரூபாய் வரை குறைவாக இருந்ததால், இங்குள்ள லாரிகள், அங்கு டீசல் நிரப்பின. இதனால், தமிழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகாவில் உயர்த்தியுள்ளதால் விலை வித்தியாசம் குறைந்துள்ளது.
இந்நிலையில், தி.மு.க., லோக்சபா தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு, லாரி உரிமையாளர்களின் கோரிக்கையான டீசல் விலை குறைப்பை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.
இதன் வாயிலாக விற்பனை மட்டுமின்றி வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.