ADDED : செப் 11, 2024 04:41 AM

சென்னை: ''அடுத்த 10 ஆண்டுகளில், சீனா - இந்தியா இடையேயான உறவில் மேலும் பாதிப்பு ஏற்படும். அமைதியை சீர்குலைக்கும் நிகழ்வுகளும் நடக்கலாம்,'' என, வெளியுறவு துறை முன்னாள் செயலர் விஜய்கேசவ் கோகலே பேசினார்.
'இந்தியா - சீனா உறவு - சீனாவின் பார்வையில்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், வெளியுறவு துறை முன்னாள் செயலர் விஜய்கேசவ் கோகலே பேசியதாவது:
மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியில் சொல்ல, சீனாவில் கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு, சமூக ஊடகங்கள் கூட, அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை தவிர, மற்ற எந்த நாட்டையும் தங்களுக்கு நிகரானது என, சீனா நினைப்பது இல்லை. இந்தியா இவ்வளவு வளர்ச்சி அடைந்த போதும், தங்கள் நாட்டுக்கு நிகராக சீனா கருதவில்லை.
கடந்த 1990 இறுதியில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அமைதிக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது, தேசிய எல்லைகளில் நம்நாடு நேர்மையான முறையில் நடந்து கொண்டது. ஆனால், சீனா எதிராக செயல்பட்டது. 2010ம் ஆண்டில் இருந்தே சீனாவிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் தென்படுகின்றன.
அணு ஆயுதங்கள் சப்ளை குழுவில் இருந்து, இந்தியாவின் பெயரை தடுத்தது சீனா. அடுத்த 10 ஆண்டுகளில், சீனா மற்றும் இந்தியா இடையேயான உறவு இன்னும் பாதிக்கும். நம் இந்திய ராணுவத்தில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் குறித்து, சீனா உற்றுநோக்கி வருகிறது. வரும் நாட்களில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை சீர்குலைக்கும் வகையிலான சூழல் ஏற்படும்.
மேலும், நட்பு நாடுகள் இடையே இந்தியாவில் தரத்தை குறைக்கும் செயல்களும் அதிகரிக்கலாம். இந்தோ - பசிபிக்கிலும், இந்திய பெருங்கடல் பகுதிகளிலும், சீனாவின் கண்காணிப்பு சமீபத்தில் தென்படுகிறது. இதிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள, இடர்களை கையாளும் வகையில் தயாராக வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தங்கள், சீரமைப்பு கொள்கை உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
சீனாவின் எல்லை விரிவாக்க கொள்கை இந்தியாவுக்கு தொல்லையாக உள்ளது. நாம் எதை செய்ய வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருந்தோம். சீனா நம்மை புரிந்து கொள்ளும் என, நாம் நினைக்கவில்லை. அதுபோலவே, இப்போதும் சீனா நடந்து கொண்டிருக்கிறது. அக்சாய் சின் பகுதியில் 5500 சதுர கி.மீ., பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது.
அகிம்சை வழியில் பேசிக் கொண்டிருந்த அப்போதைய தலைவர்களால் இந்த நிலை ஏற்பட்டது. பாகிஸ்தானுடன், சீனா மிக நெருக்கமாக நட்பு வைத்து, சர்வதேச எல்லைகள், நியூக்கிளியர் விவகாரங்களில், நமக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. இருந்தாலும், அடல் சுரங்கச்சாலை, ெஹலிகாப்டர் தறையிறங்கும் இடம், பாலங்கள் என, பல வளர்ச்சிகள் கடந்த 10 ஆண்டுகளில், நம் எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, ராணுவ தக் ஷின் பாரத் லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.