'தமிழகத்தில் முதலீடு செய்ய அமெரிக்கர்களை இந்திய வம்சாவளியினர் துாண்ட வேண்டும்'
'தமிழகத்தில் முதலீடு செய்ய அமெரிக்கர்களை இந்திய வம்சாவளியினர் துாண்ட வேண்டும்'
ADDED : செப் 02, 2024 02:01 AM
சென்னை: “தமிழகத்தில் முதலீடு செய்யும்படி, அமெரிக்க நிறுவனங்களை இந்திய வம்சாவளி மக்கள் துாண்ட வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
இந்தியாவும் - அமெரிக்காவும், உலகில் மிக முக்கியமான ஜனநாயக நாடுகள். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா இருக்கிறது என்றால், ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. அமெரிக்கா - இந்தியா நட்பு பல ஆண்டுகளாக தொடர்கிறது.
ஏழாவது இடம்
இந்தியாவுடன் வர்த்தகம், அறிவியல், கணினி போன்ற துறைகளில் நல்லுறவு தொடர்கிறது. அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடுகள் பட்டியலில், ஏழாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் பட்டியலில், இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், இந்திய மாணவர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அந்த அளவிற்கு இந்தியாவை ஈர்க்கும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர்.
இரு நாட்டு வர்த்தகமும் மூன்று மடங்கு உயர்ந்து விட்டது. புகழ் பெற்ற அமெரிக்க நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றன.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழகம் இருப்பதே இதற்கு காரணம்.
தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன. மூன்று ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள், தமிழகத்திற்கு அதிகளவில் வர துவங்கி உள்ளன.
அவர்களை அழைக்கவே, நான் நேரில் வந்திருக்கிறேன். இந்திய வம்சாவளி மக்களும், தமிழகத்தில் முதலீடு செய்ய, அமெரிக்க நிறுவனங்களை துாண்ட வேண்டும்.
ஒரு செடியையோ, மரத்தையோ ஒரு இடத்தில் இருந்து எடுத்து இன்னொரு இடத்தில் நட்டால், எல்லாம் வளர்வது இல்லை. நாடு கடந்து வந்திருந்தாலும், இங்கு வந்துள்ள இந்தியர்கள் மிக சிறப்பாக வளர்ந்திருக்கின்றனர்.
தளராத முயற்சி
இதுதான் நம் நாட்டின் பெருமை; அமெரிக்காவின் வளம். சிலர் விரும்பி வந்திருக்கலாம்; சிலரை சூழ்நிலைகள் துரத்தியிருக்கலாம். சிலர் வசதியான சூழ்நிலையிலும், சிலர் வசதி குறைவாலும் இங்கு வந்திருக்கலாம். ஆனால், இன்று எல்லாரும் உன்னதமான இடத்தை பிடித்திருக்கின்றனர்.
அதற்கு உழைப்பு, அறிவு, திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சியே காரணம். மிகச்சிறந்த கல்வி, அறிவுகூர்மை, தனி திறமைகள், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை, குறிப்பிட்ட இலக்கை அடைய தளராத முயற்சிகள் தான், இந்த இடத்திற்கு கொண்டு வந்து இருக்கிறது.
பணம், புகழ், வசதி, வாய்ப்புகளை விட, இந்த ஐந்தும் தான் அவர்களை வளர்த்து இருக்கிறது.
இந்த உயர்ந்த குணங்களை மற்றவர்களுக்கும் உணர்த்தி, அனைவரின் வளர்ச்சிக்கும் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வேற்றுமை எண்ணம் துளியும் இல்லாமல், அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழ வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில், இந்திய துணை துாதர் ஸ்ரீகர் ரெட்டி, தொழில் துறை அமைச்சர் ராஜா, அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.